மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், தனக்குத் தேவையான விதத்தில் சட்டத்தை வளைத்தது தொடர்பாக, பின்னர் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியிருந்தார்.
இதற்கு அவரே உதாரணமாகக் குறிப்பிட்டிருந்தது, சஜித் பிரேமதாசவின் சகோதரி போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்ட பின்னர் அவரை விடுதலை செய்த விதமாகும்.
மகிந்த ராஜபக்ஷ கூறியிருந்ததாவது:
“இப்போது பாருங்கள், பிரேமதாச அவர்களின் மகளை. துலாஞ்சலி பிரேமதாச கள்ளப் பணத்தை அச்சிட்டு, அதைக் கொண்டு சென்று மாற்றிக்கொண்டிருந்தபோது, கட்டுக்கட்டாகப் பிடிபட்டார். அந்த விசாரணையை முறையாகவும் சட்டபூர்வமாகவும் நடத்த நான் அனுமதிக்கவில்லை.”
BBC சிங்கள இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட அந்த விரிவான செய்தி அறிக்கை கீழே வழங்கப்படுகிறது.
லசந்த கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர்கள் அரசாங்கத்தில் இருக்கிறார்களா? – மகிந்த
BBC சிங்களம் | 6 ஆகஸ்ட் 2015
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை நடத்தாமல் இருப்பதற்குக் காரணம், அந்தக் கொலையின் சந்தேகநபர்கள் தற்போதைய அரசாங்கத்தில் இருப்பதாலா என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இதனை BBC சந்தேசயவுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலில் தெரிவித்தார்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ BBCயுடன் நடத்திய முதலாவது நேர்காணல் இதுவாகும்.
“இப்போது இந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களே, லசந்தவைக் கொன்றது இன்னார் என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்படியானால் இப்போது விசாரணை நடத்த முடியும் அல்லவா? ஏன் நடத்தவில்லை? அதற்காக சந்தேகிக்கப்பட்டவர்கள் இந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இருப்பதாலா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
“அப்படியா என்று எனக்கு உண்மையான சந்தேகம் ஏற்படுகிறது.”
2010 ஜனவரி மாதம் முதல் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பிலும் இதேபோன்ற சந்தேகம் ஏற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
“இப்போது ஏன் விசாரணை நடத்தவில்லை? அவற்றை ஏன் மூடி மறைக்கிறார்கள்? அப்படியானால், அந்தக் குழுவினர் இந்த அரசாங்கத்துக்குள் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிறது.”
‘காட்டுச் சட்டம்’
ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இலங்கையில் ‘காட்டுச் சட்டம்’ நடைமுறையில் இருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.
“அது அப்பட்டமான பொய். அது அவர்களால் உருவாக்கப்பட்ட சேறு பூசும் பிரசாரம்.”
சிராணி பண்டாரநாயக்க தலைமை நீதியரசர் பதவியில் இருந்து குற்றப்பிரேரணை மூலம் நீக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு அமைவாகவே இடம்பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தான் தோல்வியடைந்த பின்னர், இலங்கை தொடர்ந்து ‘இருண்ட யுகத்தை’ நோக்கிச் செல்வதைத் தவிர, நாட்டுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படவில்லை என்பதே கூட்டணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பாளரான மகிந்த ராஜபக்ஷவின் வாதமாக இருந்தது.
எவ்வாறாயினும், தனது ஆட்சிக் காலத்தில் சில குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுத்தது ‘ஒரு தவறு’ என்பதை அவர் மீண்டும் ஒருமுறை ஒப்புக்கொண்டார்.
“இப்போது பாருங்கள், பிரேமதாச அவர்களின் மகளை. துலாஞ்சலி பிரேமதாச கள்ளப் பணத்தை அச்சிட்டு, அதைக் கொண்டு சென்று மாற்றிக்கொண்டிருந்தபோது, கட்டுக்கட்டாகப் பிடிபட்டார். அந்த விசாரணையை முறையாகவும் சட்டபூர்வமாகவும் நடத்த நான் அனுமதிக்கவில்லை,” என அவர் குறிப்பிட்டார்.
அந்தக் குற்றவாளிகள் யார் என்று சந்தேசய அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
“நீங்கள் கேட்டதால்தான் இதை நான் சொல்கிறேன். இப்போது நான் நினைக்கிறேன், அது ஒரு தவறு என்று.”
18ஆவது அரசியலமைப்புத் திருத்தம்
அவசரமாக குற்றப்பிரேரணை ஒன்றை முன்வைத்து தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவியிலிருந்து நீக்கியது தவறான நடவடிக்கையல்லவா எனக் கேட்கப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி தாம் நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்புக்கு அமைவாகவே செயல்பட்டதாகத் தெரிவித்தார்.
“துலாஞ்சலி பிரேமதாச கள்ளப் பணத்தை அச்சிட்டு, அதைக் கொண்டு சென்று மாற்றிக்கொண்டிருந்தபோது, கட்டுக்கட்டாகப் பிடிபட்டார். அந்த விசாரணையை முறையாகவும் சட்டபூர்வமாகவும் நடத்த நான் அனுமதிக்கவில்லை.”
“இப்போது இந்த அரசாங்கம் மற்றொரு தலைமை நீதியரசரைப் பதவி நீக்கிய விதத்தில்தானா பதவி நீக்கம் செய்ய வேண்டும்?” என்று அவர் சற்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
எவ்வாறாயினும், இந்த நீண்ட நேர்காணல் முழுவதிலும் அவர் மிகவும் அமைதியாகவும், சில சந்தர்ப்பங்களில் புன்னகையுடனும், மிகவும் நட்பான பாணியிலும் கருத்துகளை வெளியிட்டார்.
“இந்த முறையை நீங்கள் சரியான முறை என்று சொல்கிறீர்கள் என்றால், எனக்குத் தெரியவில்லை…”
சில வாரங்களுக்குள் எந்தவிதமான கலந்துரையாடலும் இன்றி 18ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டமை குறித்து கேட்கப்பட்டபோது, நாட்டில் அனைத்து விடயங்களையும் தீர்மானிப்பது மக்களே என்பதால் அதில் எந்தத் தவறும் இல்லை என அவர் தெரிவித்தார்.
“எப்போது வைத்திருக்க வேண்டும், எப்போது வைத்திருக்கக் கூடாது என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். அதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
“நாம் அனைவரும் இப்போது மேற்குலகிற்கு சார்பானவர்களாகிவிட்டோம் அல்லவா? மேற்குலகிலிருந்து வரும் அனைத்தும் சரியானவை என்ற அடிப்படையில்தான் நீங்களும் பேசுகிறீர்கள்,” எனக் கூறி, நேர்காணல் நடத்திய என்னை நோக்கி தனிப்பட்ட விமர்சனத்தையும் முன்வைத்து அவர் உரையாடலை நிறைவு செய்தார்.










