புகழ்பெற்ற ஹொலிவுட் நடிகை ரோஸமண்ட் பைக் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பல தசாப்தங்களாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ரோஸமண்ட் பைக் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
ரோஸமண்ட் பைக் பிரபல நடிகை மட்டுமன்றி, மைன்ஸ் அட்வைசரி குரூப் (Mines Advisory Group – MAG) அமைப்பின் சர்வதேச தூதுவராகவும் செயற்பட்டு வருகிறார்.
பிரதமரை சந்திப்பதற்கு முன்னதாக, வடக்கில் உள்ள மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும் விதத்தை ரோஸமண்ட் பைக் நேரில் பார்வையிட்டார்.
கண்ணிவெடிகளை அகற்றும் ஆபத்தான பணிகளில் ஈடுபட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களைச் சேர்ந்த பணியாளர்களையும் அவர் சந்தித்து, அவர்களுடன் அன்பாக உரையாடினார்.
கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவை இதன்போது பாராட்டப்பட்டது.
மேலும், கண்ணிவெடி விபத்துகள் அதிகம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் நடத்தப்பட்ட கண்ணிவெடி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் ரோஸமண்ட் பைக் கலந்துகொண்டார்.
90 சதவீதத்துக்கும் அதிகமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன
இலங்கையில் கண்ணிவெடிகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட நிலப்பரப்பில் 90 சதவீதத்துக்கும் அதிகமான பகுதி தற்போது முழுமையாக கண்ணிவெடிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், போரினால் இடம்பெயர்ந்திருந்த சுமார் 10 இலட்சம் மக்களுக்கு தங்களது சொந்தக் கிராமங்களில் மீண்டும் குடியேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள கண்ணிவெடி அபாயப் பகுதிகள் தற்போது சுமார் 20.8 சதுர கிலோமீற்றர் என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீதமுள்ள பகுதிகளிலும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கி, அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் இலங்கையை முழுமையாக கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ரோஸமண்ட் பைக் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கண்ணிவெடி அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுபடும் உலகின் முன்னணி நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணிவெடி அச்சுறுத்தல் முற்றாக நீங்கிய பின்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாயம், சுற்றுலாத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.










