இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (11) முற்பகல் பாலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது அண்மைக்காலமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ச்சியடைந்துள்ள இராஜதந்திர மற்றும் கலாச்சார உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இந்தியாவின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும், இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்கள் குறித்தும் இதன்போது விசேடமாகக் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், தொழில்நுட்பத் துறை மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான பயிற்சிகளை வழங்குதல் போன்ற துறைகளில் இலங்கைக்கு வழங்கப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவின் முதல் செயலாளர் டாக்டர் ராம்பாபு செல்லப்பா (Dr. Rambabu Chellappa) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் வெளிநாட்டுப் பிரிவின் கல்பனா மதுபாஷினியும் கலந்துகொண்டனர்.











