இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவை மேலும் சுயாதீனமாகவும் வலுப்படுத்தப்பட்ட வகையிலும் செயல்படுத்துவதற்காக, 971 பேரைக் கொண்ட தனியான பணியாளர் குழுவை ஆட்சேர்ப்பு செய்து, 2027 ஜனவரி மாதம் முதல் 23 மாவட்டங்களில் அலுவலகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ON AIR POLITICS” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், இலங்கை 2004ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட ஐக்கிய நாடுகளின் ஊழல் எதிர்ப்பு உடன்படிக்கைக்கு அமைவாக, அதற்கு இணையான சட்டங்கள் 2023ஆம் ஆண்டு இலங்கையில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் அதிக அதிகாரங்களுடன் நிறுவப்பட்டுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கியமான பல தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும், தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்திலும், நீதி கோரி நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பழைய வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுத்ததாகவும் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.










