சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் சட்டத்தரணியாக முதலில் தோன்றியதன் பின்னர், சுரேஷ் சலேவின் சட்டத்தரணியாகவும் தோன்றிய உதய கம்மன்பில, தனக்கு சட்டம் தெரியாது என்பதை நேற்று (10) வெளியிட்ட ஒரு கருத்தின் மூலம் நிரூபித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம், பொலிஸ்மா அதிபருக்கு நேரடியாக மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்தின் மூலம், அவருக்கு சட்டம் குறித்த அறிவு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்மன்பில, “அப்படியானால் நாட்டில் ஒரு மன்னர் தோன்றியிருக்கிறார் என்பதை இந்தக் கைது மூலம் நாம் அறிந்துகொண்டோம். மன்னருக்கு வெற்றி வாழ்த்துக் கூறுவதா இல்லையா என்றுதான் நான் யோசித்துக்கொண்டிருந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி சாகர காரியவசத்துக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 120ஆம் பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமை தொடர்பில், கம்மன்பில இவ்வாறு வெறுப்புணர்வுடனும் திரிபுபடுத்தப்பட்ட விளக்கத்துடனும் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், 2021 ஜனவரி 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் குறித்த சட்டப்பிரிவு திருத்தப்பட்டபோது, அதில் இருந்த “மகாராணிக்கு அல்லது அரசாங்கத்திற்கு” என்ற சொற்களுக்குப் பதிலாக “ஜனாதிபதிக்கு அல்லது குடியரசின் அரசாங்கத்திற்கு” என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன.
உதய கம்மன்பிலவும் அமைச்சரவை அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வாறு இருக்கும்போது, குற்றவியல் சட்டம் தொடர்பில் திரிபுபடுத்தப்பட்ட விளக்கங்களை வழங்குவது, அவர் சட்டத்தரணியாக செயற்படுவதற்கான தகுதி தொடர்பிலும் தீவிரமான கேள்விகளை எழுப்புவதாக சட்டப் பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.










