மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரை இலக்கு வைத்து, “வீதியில் வைத்து கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்” என வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் இன்று (10) முற்பகல் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார்.
சட்டப்பூர்வவாதங்களைச் செவிமடுத்த கடுவெல நீதிவான் அருண புத்ததாச, அவரைப் பிணையில் விடுவிக்கவும் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கவும் உத்தரவிட்டார்.
இதன்போது தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சாகர காரியவசத்தைப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டதுடன், பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த பின்னர் அவரை விடுவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










