மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உட்பட மூன்று சந்தேக நபர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல உள்ளிட்ட விசேட பொலிஸ் குழுவினரால் இன்று (10) பிற்பகல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கஞ்சிபானி இம்ரானின் பிரதான கூட்டாளியான தனுஷ்க கௌசல்ய என்ற ரத்மலானே சைமா உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களும், இலங்கை பொலிஸ் குழுவும் மலேசிய பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போதே கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கஞ்சிபானி இம்ரானின் நிதியியல் நடவடிக்கைகளை ரத்மலானே சைமா என்பவரே මෙහෙயவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அவர் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால் (இன்டர்போல்) சிவப்புக் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல குற்றக் குழு உறுப்பினர்கள் மலேசியாவில் தலைமறைவாகியிருப்பதற்கு கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில் சைமா என்பவர் வசதிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த நபர் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் மலேசியாவிற்கு தப்பியோடியுள்ளதாகவும், பல கொலைகள் மற்றும் திட்டமிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.












