இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சிறப்புச் சந்திப்பொன்று நேற்று (31) பிற்பகல் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி தனது நியமனக் கடிதத்தைச் சமர்ப்பித்த புதிய தூதுவர், இலங்கைக்கு வருகை தந்த சந்தர்ப்பத்திலிருந்து இலங்கை மக்களிடமிருந்து தனக்குக் கிடைத்த அமோக வரவேற்பைப் பாராட்டியுள்ளார். இலங்கையில் தனக்கு எவ்வித அந்நிய உணர்வும் ஏற்படவில்லை என்றும், தனது பதவிக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்பு மற்றும் இராஜதந்திர உறவுகளுக்கு எதிர்வரும் ஆண்டில் 70 ஆண்டுகள் நிறைவடைவதோடு, 1952ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீனா-இலங்கை ரப்பர்-அரிசி ஒப்பந்தத்திற்கு 75 ஆண்டுகள் நிறைவடைவது தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
புதிய அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஊழல் எதிர்ப்புத் திட்டம் மற்றும் கிராமிய வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘பிரஜா சக்தி’ திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதோடு, வறுமையை ஒழிப்பதில் சீனா பெற்றுள்ள அனுபவங்களை இலங்கைக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
சீனா பிற நாடுகளுடன் செயற்படுவது அந்நாடுகளின் இறையாண்மையை மதித்தும், பரஸ்பர வளர்ச்சியை எதிர்பார்த்துமே எனத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் இலங்கைக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்குச் சீன முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்திப் பாதையின் காரணமாகவே, தன்னைப் போன்ற கடினமான கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட ஒருவரால் கூட இராஜதந்திர அதிகாரியாக உயர்வடைய முடிந்தது எனத் தூதுவர் தனது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு தரப்பினரும் உடன்பாடு தெரிவித்ததுடன், இந்நிகழ்வில் சீனத் தூதரகத்தின் அரசியல் பிரிவின் ஆலோசகர் மேய் ஜிங் (Mei Jing), அரசியல் பிரிவின் சின் லிகோங் (Chin Ligong), தூதரகத்தின் மூன்றாம் செயலாளர் ஜின் என்ஸே (Jin Enze) உள்ளிட்ட அதிகாரிகளும், ஜனதா விமுக்தி பெரமுனவின் சர்வதேச பிரிவின் சட்டத்தரணி கல்பனா மதுபாஷினியும் கலந்துகொண்டனர்.


