ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் போரை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் மனநிலையை உருவாக்குவதற்காக “மக்கள்வாத ஐக்கிய எதிர்க்கட்சி” என்ற பெயரில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக் குழு, பொய்களையும் அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்ட பிரசாரங்களை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் முக்கிய சிந்தனையாளரும் பிரசாரகருமான முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாட்டில் பாரிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், போரின் விளைவுகள் மிகவும் மோசமாக உணரப்பட்ட காலகட்டத்திலும், எரிபொருள் ஒதுக்கீட்டு முறை, குறுகிய காலத்திற்கு வாரத்தின் நடுப்பகுதியில் விடுமுறை வழங்குதல் மற்றும் மின்சார விநியோகத்தை சீராகப் பேணுவதற்கான முறையான திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், போரினால் உலகளவில் ஏற்பட்ட நெருக்கடியின் தாக்கம் இலங்கை மக்களை பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது 7 மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவி வருகின்ற போதிலும், ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் வரை எவ்வித மின்வெட்டும் இன்றி மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










