ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணையின் போது, கிரித்தலே 3வது ஆயுதப் படைப்பிரிவின் புலனாய்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினரான சுமத்திபால சுரேஷ் குமார் என்ற ‘முரளி’, குறித்த முகாமில் இருந்த நான்கு இராணுவ அதிகாரிகளை திறந்த நீதிமன்றத்தில் அடையாளங்காட்டினார்.
சாட்சியாளரான சுமத்திபால சுரேஷ் குமார், 2009 முதல் 2013 வரையிலான காலப்பகுதியில் கிரித்தலே இராணுவப் புலனாய்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக சாட்சியமளித்ததுடன், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது முதலாம் பிரதிவாதி முதல் நான்காம் பிரதிவாதி வரையிலான நபர்களும் ஏனையோரும் அந்த முகாமில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2009 ஆகஸ்ட் 27 அன்று கடத்தப்பட்டமை தொடர்பில் 07 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2009 ஆகஸ்ட் 27 அன்று கடத்தப்பட்டு வழியில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் 2010 ஜனவரி 24 அன்று மீண்டும் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டார்.
2010 ஜனவரி 24 அன்று இடம்பெற்ற கடத்தல் மற்றும் காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு முப்படை மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
தான் கிரித்தலே முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, இராணுவ அதிகாரிகள் தொலைபேசியை வழங்கி அவர்கள் தரும் எண்களுக்கு அழைப்பு எடுக்குமாறு அறிவுறுத்தியதாகவும், அவ்வாறு அழைப்பு எடுக்கப்பட்டவர்களில் வெளிநாடுகளில் உள்ளவர்களும் அடங்குவர் என்றும், 2010 ஜனவரி 24 அன்று எக்னெலிகொடவுக்கும் தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டதாகவும் சுமத்திபால சுரேஷ் குமார் என்ற ‘முரளி’ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.










