இலங்கையின் மக்கள் தொடர்பாடல் துறையின் முன்னோடியும், ஆசிய தொடர்பாடல் கோட்பாட்டின் முன்னணி அறிஞருமான பேராசிரியர் விமல் திஸாநாயக்க காலமானார்.
அமெரிக்காவின் ஹவாயில் காலமான போது பேராசிரியர் விமல் திஸාநாயக்கவுக்கு 86 வயதாகும்.
இலங்கையில் மக்கள் தொடர்பாடல் தொடர்பான முதலாவது பல்கலைக்கழக கலாநிதியான பேராசிரியர் விமல் திஸාநாயக்க, இலங்கை இலக்கிய விமர்சனம், மக்கள் தொடர்பாடல், சினிமா ஆய்வு மற்றும் ஆசிய தொடர்பாடல் கோட்பாடுகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற முன்னணி அறிஞராவார். இவர் ஒரு கவிஞராகவும், நூலாசிரியராகவும் திகழ்ந்தார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பாடல் கற்கைகள் திணைக்களத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராகவும், அதன் முதலாவது திணைக்களத் தலைவராகவும் செயற்பட்டு, இலங்கை பல்கலைக்கழக அமைப்பில் மக்கள் தொடர்பாடல் பாடத்தை கல்வி மட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்கு பேராசிரியர் விமல் திஸாநாயக்கவே முன்னின்றார்.
கண்டி திரித்துவக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்று, அன்றைய இலங்கை பல்கலைக்கழகத்தில் இணைந்து சிங்களம், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் கற்று சிங்கள மொழியில் கௌரவப் பட்டத்தைப் பெற்ற அவர், பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து உருவான ஒரு சுயாதீன அறிஞராகவும் கருதப்படுகிறார்.
பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைந்து ஆங்கில இலக்கியத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற பேராசிரியர் விமல் திஸாநாயக்க, 1975 ஆம் ஆண்டு பெற்ற உயர் புலமைப்பரிசில் மூலம் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பாடல் மற்றும் சினிமா தொடர்பான முனைவர் பட்டத்திற்கு பிந்தைய (Postdoctoral) பட்டத்தையும் பெற்றார்.
1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகத்தில் நியமனம் பெற்று வெளிநாடு சென்ற பேராசிரியர் விமல் திஸாநாயக்க, அங்கு மக்கள் தொடர்பாடல் பேராசிரியராகப் பணியாற்றியதுடன், ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் கெளரவப் பேராசிரியராகவும் கௌரவிக்கப்பட்டார். இது தவிர, பிரித்தானியாவின் பிபிசி (BBC) வானொலி சேவையினாலும் அவர் சிறப்பு மதிப்பிற்குட்படுத்தப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.










