நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை மற்றும் மக்காச்சோளப் பற்றாக்குறை காரணமாக முட்டை உற்பத்தி குறைந்துள்ளதே சந்தையில் முட்டை விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வாராந்திர முட்டை விலையை நிர்ணயிக்கும் கணக்கெடுப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், தற்போது சந்தையில் முட்டைகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி குறைவால் விலை உயர்வு தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
கோழிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காததால் அவற்றின் முட்டையிடும் திறன் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக மக்காச்சோளம் உள்ளிட்ட தீவனப் பொருட்களின் பற்றாக்குறை உற்பத்தி வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு பலமுறை அரசிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடல் நடத்தித் துறையின் சிக்கல்களுக்கு நிலையான தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும், உற்பத்தியாளர்களின் நலனுடன் நுகர்வோரின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சரத் ரத்நாயக்க வலியுறுத்தினார்.










