கடந்த 2025 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 236 பில்லியன் ரூபாயாக காணப்பட்ட அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட இடைவெளி (Budget Deficit), இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் சுமார் 197 பில்லியன் ரூபாய் உபரியாக (Budget Surplus) மாறியுள்ளது. இது இலங்கையின் அரசாங்க நிதி மேலாண்மையில் அடைந்துள்ள ஒரு முக்கிய திருப்புமுனையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதி மற்றும் பொருளாதார பகுப்பாய்வாளர்களின் கவனம் இந்த வெற்றியின் பால் திரும்பியுள்ள நிலையில், பொருளாதார பகுப்பாய்வாளர் சித்ரால் ஜயவர்தன இது தொடர்பில் வழங்கிய முக்கிய பகுப்பாய்வு விவரங்கள் வருமாறு:
வரவு செலவுத் திட்ட உபரி – பொருளாதாரத்திற்கு புதிய நம்பிக்கை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை, இன்று படிப்படியாக நிதி ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பி வருகிறது. 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பதிவாகியுள்ள இந்த ரூ. 197 பில்லியன் உபரி, நாட்டின் நிதி வலுவடைந்து வருவதை உறுதிப்படுத்துகிறது.
அரசாங்கத்தின் வருமானம் அதன் செலவீனங்களை விட அதிகரிக்கும் போதே ‘வரவு செலவுத் திட்ட உபரி’ ஏற்படுகிறது. இது நாளாந்த செலவுகளுக்காக தொடர்ச்சியாக கடன் வாங்கும் தேவையை குறைத்து, நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்துகிறது.
வரி வருவாய் உயர்வு மற்றும் செலவு மேலாண்மை
இந்த உபரி நிலைக்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் வருவாய் வளர்ச்சியாகும். ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் மானியங்கள் 13.6% ஆல் அதிகரித்து 2.54 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் வரி வருவாய் மட்டும் 23.9% ஆல் அதிகரித்து 2.32 டிரில்லியன் ரூபாயை எட்டியுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றின் திறம்பட வரி வசூல் நடவடிக்கை இதற்கு பிரதான காரணமாகும்.
அதேவேளை, அரசாங்கத்தின் மொத்த செலவினங்கள் திட்டமிடப்பட்ட முறையில் 7.3% மட்டுமே அதிகரித்துள்ளன. இதில் மறுநிகழ்வுச் செலவுகள் (Re-recurrent expenditure) 5.5% எனும் குறைந்த மட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நீண்டகால அபிவிருத்திக்கான மூலதனச் செலவுகள் (Capital expenditure) 29.3% ஆல் அதிகரித்து 226.83 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது அரசாங்கம் நீண்டகால பொருளாதார வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துவதை காட்டுகிறது.
முதன்மை உபரியின் முக்கியத்துவம் (Primary Surplus)
2026 இன் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் முதன்மை உபரி 1.13 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 2025 இன் அதே காலப்பகுதியுடன் (ரூ. 742.9 பில்லியன்) ஒப்பிடுகையில் 52.3% வளர்ச்சியாகும். சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்ற சர்வதேச அமைப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெல்வதற்கு இந்த முதன்மை உபரி மிக முக்கிய காரணியாகும்.
எதிர்கால சவால்களும் பொறுப்புகளும்
ஐந்து மாதங்களின் வெற்றியை மட்டும் வைத்து ஆண்டு முழுவதுக்குமான முடிவை எடுக்க முடியாது. எதிர்வரும் மாதங்களில் கடன் சேவை செலுத்துகைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, மக்கள் மீது அதிக வரிச்சுமையை சுமத்தாமலும், அத்தியாவசிய பொதுச்சேவைகளை வெட்டிக்கறைக்காமலும், வரித் தளத்தை விரிவுபடுத்துவதன் மூலமும் வீண்விரயங்களை தவிர்ப்பதன் மூலமும் இந்த நிதி ஒழுக்கத்தை தொடர்ந்து பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த உபரித் தொகையை கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு சரியாகப் பயன்படுத்துவதன் மூலமே நாட்டின் உண்மையான அபிவிருத்தியை உறுதி செய்ய முடியும்.










