தோட்டத் தொழிலாளர்களின் எந்தவொரு நியாயமான போராட்டத்திற்கும் எந்தவொரு நிபந்தனையுமின்றி மக்கள் விடுதலை முன்னணி உடன் நிற்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
நேற்று (16) மஸ்கெலியா மற்றும் நோர்வுட் பிரதேசங்களில் தோட்ட மக்களுடனானக் கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
“06 வருடங்களுக்கு முன்பிருந்தே தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து 1000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க நாமும் போராடிக்கொண்டு இருக்கிறோம். அன்றிருந்த வாழ்க்கைச் செலவிற்கேற்ப 1000 ரூபாய் கேட்டு நாம் போராடினோம்.
06 வருட போராட்டங்களுக்குப் பின்பு இப்போதுதான் 1000 ரூபாய் கிடைக்கவிருக்கிறது. ஆனால், இன்று விலைவாசி மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துப்போய் உள்ளன.
நாம் கேட்ட முதற் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கம் 1000 ருபாய் சம்பளத்தை வழங்கிவிடவில்லை. தோட்டத் தொழிலாளர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே கம்பெனியின் 900 ரூபாவுடன் அரசாங்கத்தின் 100 ரூபாவையும் சேர்த்து 1000 ரூபாய் தரப்போகிறார்கள்.
கூட்டு உடன்படிக்கையில் கிடைத்த சலுகைகள் சம்பள நிர்ணய சபையினூடாக சம்பளத்தை உயர்த்தும்போது இல்லாமல் ஆக்கப்படலாம். அச்சலுகைகள் வழங்கப்படாது போனால் அதனை வென்றெடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.
இந்நாட்டின் பொருளாதாரத் தூண்கள் நீங்கள். அந்நிய செலாவணி மூலமும் பணத்தைத் தேடிக்கொடுக்கிறீர்கள். உங்களது வியர்வையினால் தோட்டங்கள் செழிப்புற்றது. ஆனால், நீங்கள் மனிதர்களாக வாழக்கூடியச் சூழலை இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. நீங்கள் சிந்துகின்ற வியர்வையின் பெறுமதிக்கு உரிய ஊதியம் உங்களுக்கு வழங்கப்படவில்லை. குறைந்த வசதியுடனான வீடுகள் இல்லை. அநேகமானோர் இன்னமும் லயன் காம்பிராக்களிலேயே வாழ்கிறார்கள்.
பிள்ளைகள் முறையாக கற்பதற்கு வசதிகள் அடங்கிய பாடசாலைகள் இல்லை. ஒழுங்கான அரச மருத்துவமனை இல்லை. அவ்வாறு இருந்தாலும் அங்கு மருந்துகள் இல்லை. சனசமூக நிலையங்கள் இல்லை. மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் தான் நீங்கள் வாழ்கிறீர்கள். பிள்ளைகளுக்கு விளையாடுவதற்கான மைதானமோ அல்லது வேறு வசதிகளோ இல்லை.
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுடைய கல்வித் தகைமைகள் குறைவு என்பதால் வேறு நல்ல தொழில் செய்யமுடியாத நிலைமை காணப்படுகிறது. தோட்டங்களிலேயே வேலைசெய்ய அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது நியாயமற்றது.
உரிமைகள் உள்ள, அந்தஸ்துள்ள கௌரவமானப் பிரஜைகளாக நீங்கள் வாழ் வேண்டும். ஆனால், அந்த உரிமையைப் பெற்றுக்கொடுக்க எவராலும் முடியாது உள்ளது.
வாழ்க்கை என்பது இதுவல்ல. இதற்கும் மேலான வாழ்க்கை ஒன்றுள்ளது. இதுவரை எந்த அரசாங்கமும், மலையகத் தலைவர்களும் அதனைப் பெற்றுக்கொடுக்கவில்லை. அதனால் சம்பள போராட்டத்தை மாத்திரம் நடத்திக்கொண்டு ஏழ்மையில் மூழ்கி இருக்கிறோம். இந்த வாழ்க்கையை நாம் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டாமா? உங்களது பிள்ளைகள் சிறந்ததொரு வாழ்க்கை வாழ்வதை பார்க்க நீங்கள் ஆசைப்படவில்லையா? எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.”