Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேராவும் FCIDக்கு அழைப்பு!

15/09/2026 Leave a Comment

விமானப்படையின் முன்னாள் தளபதியான எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிக் (MiG) ரக போர் விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி மார்ஷல் ஒஃப் த எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க ஆகிய இருவரும் குறித்த கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பெறப்பட்ட அழைப்புக்கு அமைய பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகரவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

15/09/2026 Leave a Comment

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான முறைப்பாடொன்றுக்கு அமைவாக, பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவர் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய, குறித்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்த ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன ரூபா 50,000 வீதமும், அக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அப்போதைய பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்துக்க டி சில்வா ரூபா 10,000 வீதமும் மனுதாரர்களான ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தம்மை சட்டவிரோதமாகக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

Filed Under: செய்திகள்

ரூ. 32 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் கட்டுநாயக்கவில் மீட்பு!

15/09/2026 Leave a Comment

சுமார் 32 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருள் தொகுதியை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 06 ஆம் இலக்க பயணப்பொதி பகுதியில் கைவிட்டுச் சென்றிருந்த நிலையில், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இன்று (15) அதிகாலை மீட்டுள்ளனர்.

இரண்டு பயணப்பொதிகளுக்குள், காற்று புகாதவாறு அடைக்கப்பட்ட 60 பொட்டலங்களில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

தாய்லாந்தின் பாங்கொக் நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான UL-405 ரக விமானத்தில் வந்த பயணியொருவரே இதனை எடுத்து வந்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விமான நிலையத்திற்குள் வைத்து தான் கைது செய்யப்படக்கூடும் என அஞ்சிய அவர், இந்த 02 பயணப்பொதிகளையும் கைவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கேமரா (CCTV) காட்சிகளைப் பரிசீலித்தும், ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்தும், இந்த போதைப்பொருளைக் கொண்டு வந்த பயணியைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Filed Under: செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி அப்துல் வாஹித் ராஜினாமா!

15/09/2026 Leave a Comment

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாகப் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ். அப்துல் வாஹித்தின் கடிதத்திற்கு அமைவாக, இந்த ராஜினாமா 2026 செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் அமலுக்கு வருவதாகவும் பதில் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் பதவியொன்று வெற்றிடமாகியுள்ளதாக 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Filed Under: செய்திகள்

நாளை சுகாதாரத் துறையில் மாபெரும் மாற்றம் – ஜனாதிபதி தலைமையில் ரூ. 7,148 மில்லியன் பெறுமதியான திட்டங்கள் ஆரம்பம்!

15/09/2026 Leave a Comment

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவரமைப்பு (JICA) மற்றும் இந்திய அரசாங்கத்தின் கடன் மற்றும் உதவி வசதிகளின் கீழ் ரூ. 7,148 மில்லியன் செலவில் கட்டப்படவுள்ள அதிநவீன சிகிச்சை வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (16) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விசேட வைத்தி​யர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கமைய, பின்வரும் திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டப்படவுள்ளது:

அநுராதபுரம் போதனா மருத்துவமனை: JICA நிதி உதவியின் கீழ் ரூ. 3,545 மில்லியன் செலவில் கட்டப்படவுள்ள 8 மாடிகளைக் கொண்ட அதிநவீன இதய சிகிச்சை வளாகம். இதில் விசேட தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (CCU/ICU), கேத் ஆய்வகங்கள் (Cath Labs), வார்டுகள், கிளினிக்குகள், எக்ஸ்ரே மற்றும் ECG வசதிகள் சேர்க்கப்படும்.

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனை: JICA நிதி உதவியின் கீழ் ரூ. 2,403 மில்லியன் செலவில் கட்டப்படவுள்ள 8 மாடிகளைக் கொண்ட அதிநவீன இதய சிகிச்சை வளாகம்.

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை: இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ரூ. 600 மில்லியன் செலவில் கட்டப்படவுள்ள அதிநவீன அவசர சிகிச்சை மற்றும் விபத்துப் பிரிவு வளாகம்.

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை: இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ரூ. 600 மில்லியன் செலவில் கட்டப்படவுள்ள 4 மாடிகளைக் கொண்ட வார்டு வளாகம்.

இந்நிகழ்வுகளில் இலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமதா (Akio Isomata), JICA நிறுவனத்தின் இலங்கைக்கான முதன்மைப் பிரதிநிதி ஷிகியோ ஹொன்சு (Shigeo Honzu) மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கொழும்புக்கு வெளியே உள்ள தூரப் பிரதேசங்களில் வாழும் மக்கள், இதய நோய்கள் மற்றும் அவசர விபத்துகளுக்கான விசேட சிகிச்சைகளைத் தத்தமது பிரதேசங்களிலேயே விரைவாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ள இத்திட்டங்கள் வழிவகுக்கும்.

Filed Under: செய்திகள்

சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற மற்றொரு காவலர் கையும் களவுமாகப் பிடிபட்டார்!

15/09/2026 Leave a Comment

தனது காலணிகளுக்குள் (Shoe) போதைப்பொருட்களை மறைத்து வைத்து சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்ல முயன்ற சிறைச்சாலைக் காவலர் ஒருவர் இன்று (14) வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போதே இவர் போதைப்பொருட்களுடன் பிடிபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 96 கிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருளும் 16.7 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரைக்கைது செய்துள்ள பொரளை பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Filed Under: செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் சஜித் பிரேமதாசவை கைவிட்டு மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார்!

15/09/2026 Leave a Comment

முன்னாள் அமைச்சரான ஜயரத்ன ஹேரத் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (SLFP) இணைந்து கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான இவர், பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்பட்டு வந்தார். இவர் குருணாகல், பொல்கஹவெல மற்றும் மாவத்தகம ஆகிய தொகுதிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைப்பாளராகப் பணியாற்றியதுடன், பின்னர் யாப்பஹுவ தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளராகவும் செயற்பட்டார்.

இதற்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொல்கஹவெல தொகுதிக்கான முதன்மை அமைப்பாளராகவும், குருணாகல் மாவட்டத்திற்கான கட்சித் தலைவராகவும் முன்னாள் அமைச்சர் ஜயரத்ன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க, பொருளாளர் லசந்த அழகியவண்ண, கட்சியின் உப செயலாளர் ஜகத் புஷ்பகுமார, வடமேல் மாகாண முன்னாள் அமைச்சரும் குருணாகல் தொகுதி அமைப்பாளருமான லக்ஷ்மன் வெடருவ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட துமிந்த திஸாநாயக்க, சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஜகத் புஷ்பகுமார ஆகிய மூவரும் நிதி முறைகேடுகள், ஊழல் மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தற்போது நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

திசைகாட்டி அரசாங்கம் மக்களுடனான ஒப்பந்தத்தை சரியாக நிறைவேற்றுகிறது – அமைச்சர் வசந்த சமரசிங்க

15/09/2026 Leave a Comment

தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி) அரசாங்கம் மக்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை சரியாகச் செயற்படுத்தி வருவதாகவும், வழக்குகள் காரணமாகக் கட்சி மாறியவர்கள் தற்போது அச்சமடைந்துள்ளதாகவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் அமைச்சர் வசந்த சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பொலன்னறுவையில் கடந்த 12 ஆம் திகதி “அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நல்வாழ்வு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர்:

“அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறோம். அநுர சகோதரர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் மாற்றத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைத்தோம். ஆரம்பத்தில் சிலர் குற்றவாளிகளைக் கைது செய்யும் வேகம் போதாது எனக் கூறினர். சட்டத்தைச் நடைமுறைப்படுத்துவதில் பொலிஸ், நீதிமன்றக் கட்டமைப்பு உள்ளிட்ட பல நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.

வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக ஒப்பந்தங்களைச் செய்து கட்சி மாறியவர்கள் தற்போது பயந்துபோயுள்ளனர். ஏனெனில் திசைகாட்டி அரசாங்கம் மக்களுடன் வைத்துள்ள ஒப்பந்தத்தை சரியாகச் செயற்படுத்துகிறது. சட்டத்தின் முன் குற்றவாளிகளாக உருவெடுப்பவர்கள் வரிசையாகச் சிறைக்குச் செல்வார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை 15,000 ரூபாவாக இருந்த உர மானியத்தை 25,000 ரூபாவாக உயர்த்தினோம். பின்னர் மேலும் 5,000 ரூபாவை அதிகரித்தோம். இதனால் சிறுபோகம் மற்றும் பெரும்போகம் ஆகிய இரண்டிலும் 13 இலட்சத்திற்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டது. வெங்காய உற்பத்தியை ஊக்குவிக்க இறக்குமதி வரியை 10 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக உயர்த்தினோம்.

2026 ஆம் ஆண்டில் பெரும் அறுவடை கிடைத்துள்ளதுடன், விவசாயிகளைப் பாதுகாக்கவும் குளங்களை புனரமைக்கவும் இந்த ஆண்டு 35,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் போர் காரணமாக உரங்களின் விலைகள் உயர்ந்த போதிலும், கோவிஜன சேவை மையங்கள் மூலம் 7,000 ரூபா சலுகை விலையில் உர மூட்டை வழங்கப்பட்டது. இதுவரை அமைக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கமும் இரண்டு ஆண்டுகளில் இந்தளவுக்குப் பணியாற்றவில்லை.”

Filed Under: செய்திகள்

ஷிரானந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர் FCIDக்கு அறிவுறுத்தல்!

15/09/2026 Leave a Comment

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகள் நிமித்தம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரானந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிவித்தலுக்கு அமைய, எதிர்வரும் நாட்களில் அவரிடம் வாக்குமூலங்களைப் பெறவுள்ளதாக பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ‘சிரிலிய சவிய’ என்ற பெயரில் பேணப்பட்ட கணக்கில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஷிரானந்தி ராஜபக்ஷ உட்பட மூவரின் கூட்டுப் பங்களிப்புடன் அரச வங்கியொன்றின் சுதுவெல்ல கிளையில் இக்கணக்கு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலத்தில் பெரிதும் பேசப்பட்ட ஷிரானந்தி ராஜபக்ஷவின் ‘222222222V’ எனும் தேசிய அடையாள அட்டை இலக்கமே இக்கணக்கிற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இக்கணக்கின் ஊடாக பல சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஷிரானந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாது – பிரதி அமைச்சர் டி.பி. சரத்

15/09/2026 Leave a Comment

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எவராலும் அசைக்க முடியாது எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கம் மிகவும் கடினமான நேரங்களிலும் மக்களுடன் உறுதியாக இருக்கும் எனவும் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் கடந்த 12 ஆம் திகதி “அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நல்வாழ்வு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர்:

“பராக்கிரம சமுத்திரத்தின் அருகில் அமைந்துள்ள புலதிசிபுரவில் இந்த விவசாய பேரணியை நாங்கள் அமைத்ததன் நோக்கம், நாம் எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்வது குறித்து கலந்துரையாடுவதற்கேயாகும். இந்த அரசாங்கத்தின் பலமிக்க சக்தியாகத் திகழ்பவர்கள் இந்த விவசாய மக்களே ஆவர். பராக்கிரம சமுத்திரத்தின் வலிமையைப் போன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பலத்தையும் யாராலும் அசைக்க முடியாது.

விவசாயிகளை வலுப்படுத்தும் எமது பயணத்தில், கடந்த போகத்திற்கு மட்டும் அரசாங்கம் 19,000 இலட்சம் ரூபாவை மானியமாக வழங்கியுள்ளது. ‘தித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு 6,000 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 7,000 ரூபா மானியத்துடன் 40,000 மெட்ரிக் தொன் உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வரும்போது 99 ரூபாவாக இருந்த ஒரு கிலோ நெல்லின் குறைந்தபட்ச விலை 105 ரூபாவாக அதிகரித்ததுடன், தற்போது உத்தரவாத விலையாக 120 ரூபாவை வழங்கி வருகிறோம். ஒரு கிலோ நெல்லின் உற்பத்திச் செலவு 90 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிக்கு நியாயமான விலையும், நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியும் உறுதி செய்யப்படுகிறது.

தற்போது அரிசி உற்பத்தியில் உபரி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உபரியின் காரணமாக 120 ரூபா உத்தரவாத விலையைப் பேணுவதில் சில சவால்கள் எழுந்துள்ளன. இதற்குத் தீர்வாக அரிசியைப் பயன்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதற்கான தீர்வை நாம் நிச்சயம் கண்டறிவோம். ‘தித்வா’ சூறாவளியின் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க 50,000 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்தார்.

எதிர்வரும் சில ஆண்டுகளில் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் உயர்தர சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு, தேசிய வருவாயில் அவர்களுக்குரிய நியாயமான பங்கைப் பெற்றுத்தர விரைவாகச் செயற்படுவோம். நீதியான மற்றும் சுதந்திரமான சமூகத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.”

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • …
  • 586
  • Next Page »

Recent Posts

  • நீதிபதிகளின் வருமான வரி விவகாரத்தில் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!
  • ரேணுக பெரேரா விளக்கமறியலில்!
  • கரன்னாகொட மற்றும் யோஷிதவிற்கு எதிரான வழக்கு: வழக்குக்கு முந்திய மாநாட்டிற்கு அழைப்பு!
  • ஜப்பானில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் 16 வயது இலங்கை வீராங்கனை!
  • நாமல் ராஜபக்ஷ முற்றாக தனிமைப்படுத்தப்பட்டார்! அநுராதபுர பேரணியின் பின் ஆதரவாளர்கள் இன்றி வெறிச்சோடிய நீதிமன்ற வளாகம்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.