ரூ. 32 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் கட்டுநாயக்கவில் மீட்பு!

katunayake airport 2026.09.15 (1)

சுமார் 32 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருள் தொகுதியை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 06 ஆம் இலக்க பயணப்பொதி பகுதியில் கைவிட்டுச் சென்றிருந்த நிலையில், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இன்று (15) அதிகாலை மீட்டுள்ளனர்.

இரண்டு பயணப்பொதிகளுக்குள், காற்று புகாதவாறு அடைக்கப்பட்ட 60 பொட்டலங்களில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

தாய்லாந்தின் பாங்கொக் நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான UL-405 ரக விமானத்தில் வந்த பயணியொருவரே இதனை எடுத்து வந்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விமான நிலையத்திற்குள் வைத்து தான் கைது செய்யப்படக்கூடும் என அஞ்சிய அவர், இந்த 02 பயணப்பொதிகளையும் கைவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கேமரா (CCTV) காட்சிகளைப் பரிசீலித்தும், ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்தும், இந்த போதைப்பொருளைக் கொண்டு வந்த பயணியைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்