கேள்விகளிலிருந்து தப்பி ஓடுபவர்களே பலவீனமானவர்கள் என கடந்த சில நாட்களாக எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தான் சட்டத்திற்கு மதிப்பளிப்பதாகவும், தான் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுவதை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் காணாமல் போயுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் பரப்பப்பட்ட போதிலும், கேள்விகளிலிருந்து தப்பி ஓடும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களே பலவீனமானவர்கள் என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் நாட்டிற்காகவே செயற்பட்டதாகவும், அதனால் தான் பிரச்சினைகளை எதிர்கொள்வேனே அன்றி அவற்றிலிருந்து தப்பிச் செல்லமாட்டேன் என்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட சவாலுக்குட்படுத்தியிருந்தார். இதனையடுத்து, குறித்த ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்தே கலகொடஅத்தே ஞானசார தேரர் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










