இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
2022–2023 பொருளாதார நெருக்கடி, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்தியா வழங்கிய உதவிக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். மேலும், இந்திய ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை ஜனாதிபதி கோரியதுடன், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிராந்திய சவால்களை எதிர்கொள்வதில் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார செயலாளர், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் வர்த்தகத் துறைகளில் இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இருதரப்பும் கவனம் செலுத்தின.