சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (ITF – International Transport Workers’ Federation) மற்றும் இலங்கை தேசிய மாலுமிகள் சங்கம் (NUSS) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள, போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்த சர்வதேச மாநாடு, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு தலைமையில் நேற்று (15) கொழும்பில் நடைபெற்றது.
போக்குவரத்துத் துறையில் AI இன் தாக்கம் குறித்த இம்மாநாடு வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், உலகின் 60 நாடுகளைச் சேர்ந்த 90 தொழற்சங்கப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இம்மாநாட்டில் சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச்செயலாளர் ஸ்டீபன் காட்டன் (Mr. Stephen Cotton), புதிய தலைவர் பிராங்க் மோரீல் (Mr. Frank Moreel), தொழிலாளர்களின் எதிர்காலப் பிரிவின் பணிப்பாளர் பாகர் குண்டாஜி (Ms. Baker Khundakji), இளைஞர் பிரிவைச் சேர்ந்த பிரீதி சிங் (Ms. Preethi Singh), தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கான ஆலோசனைக் குழுவின் தலைவர் ஹொராசியோ கல்குலி (Mr. Horacio Calculli) மற்றும் இலங்கை தேசிய மாலுமிகள் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி போவா அதுகோரள ஆகியோர் கலந்துகொண்டனர்.
போக்குவரத்துத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், அதன்போது பின்பற்றப்பட வேண்டிய அளவுகோல்கள் குறித்தும் இம்மாநாட்டில் தெளிவுபடுத்தப்படவுள்ளது.







