
அதிகமாக ஆடாதீங்கன்னு எச்சரித்தேன்; நினைவிருக்கிறதா? இந்திய அணியைக் கிண்டல் செய்த பீட்டர்ஸன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்றபின் அதிகமாக ஆடாதீங்க, கொண்டாடாதீங்க என்று உங்களை எச்சரித்தேன். நினைவிருக்கிறதா? என்று இந்திய அணியின் டெஸ்ட் தோல்விக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் கிண்டலடித்துள்ளார்.
சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 420 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி 192 ரன்களில் ஆட்டமிழந்து 277 ரன்களில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 72 ரன்களும், கில் 50 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்றினர். கேப்டன் கோலி தலைமையில் சந்திக்கும் தொடர் 4-வது தோல்வியாகும்.
ஆஸ்திரேலிய பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி, நாடு திரும்பியது. அந்தக் கொண்டாட்டத்தில் இந்திய அணி இருந்தபோது, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து, ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை எழுப்பியது.
அதில், “அனைத்துத் தடைகளையும் கடந்து ஆஸ்திரேலியத் தொடரை வென்றதால், இந்திய அணி வீரர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், உண்மையான கிரிக்கெட் அணி அடுத்த சில வாரங்களில் இந்தியா வர உள்ளது. உங்கள் சொந்த மண்ணில் அவர்களை வெல்ல வேண்டும்.
ஆதலால், எச்சரிக்கையாக இருங்கள். இந்திய அணியினர் வெற்றியைக் கொண்டாடுவதை இரு வாரங்களுக்குக் குறைத்துக் கொள்ளுங்கள்” என இங்கிலாந்து அணியின் வருகையை குறிப்பிட்டு பீட்டர்ஸன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்ததையடுத்து, பீட்டர்ஸன் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
அதில், “இந்திய அணி வீரர்களை நான் இதற்கு முன் உங்களை எச்சரித்திருந்தேன். நினைவிருக்கிறதா? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றபின் அதிகமாகக் கொண்டாடாதீர்கள், ஆடாதீர்கள் என்று எச்சரித்திருந்தேன் நினைவிருக்கிறதா” எனக் கேட்டு கிண்டல் செய்துள்ளார்.
இங்கிலாந்து அணி வெளிநாடுகளில் சென்று பெறும் 6-வது வெற்றி இதுவாகும். இற்கு முன் தென் ஆப்பிரிக்கா, இலங்கையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்…
இந்தோனேசியாவில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பெங்குலு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. புதன்கிழமை இரவு 7.52 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
தென்மேற்கு எங்கானோ தீவிலிருந்து 80 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகவும், கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட வில்லை.
நல்வாய்ப்பாக இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பொருள் சேதமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த_ஞாயிறு_தாக்குதலுக்குப் பதில் இல்லையேல் நான் சர்வதேச நீதிமன்றம் செல்வேன் – கர்தினால் ரஞ்சித் ஆண்டகை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக இந்நாட்டு சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இன்று (11) பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பேராயர்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதியொன்றை தான் ஜனாதிபதியிடம் கோரியிருந்த போதிலும் இதுவரை கிடைக்கவில்லை.
சில விடயங்கள் தொடர்பில் உண்மை தன்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் காரணமாக எமக்கு இதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. விரைவில் குறித்த பிரதிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவும். அப்பொழுது எமக்கு பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்.” என்றார்.
ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஜனாதிபதி அறிக்கையை மறைத்துக்கொண்டிருப்பது ஏன்?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. ஆனால், அவ்வறிக்கையை சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிர்வாகத்திடமோ அல்லது பொதுமக்களிடமோ வெளிப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
கடந்த தினத்தில் பொலிஸ்மா அதிபரிடம் சட்டமா அதிபர் கடிதமொன்றைக் கொடுத்தனுப்பி, ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பந்தமாக முன்னெடுக்கப்படவிருக்கும் ஆராய்வு அலுவல்களுக்காக குறித்த அறிக்கையை ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருந்தார்.
குறித்த அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொண்ட பின்னர் இரண்டு அமைச்சரவை கூட்டங்களை நடத்தியபோதிலும், அதில் அறிக்கை குறித்து எந்தவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. அறிக்கை குறித்து கலந்துரையாட விசேட அமைச்சரவை கூட்டம் கூடும் என்று அறிவிக்கப்பட்டபோதும், இதுவரையில் அது மேற்கொள்ளப்படவில்லை.
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டபோதிலும், அரசாங்கம் அதைச் செயற்படுத்தவில்லை. அதேநேரம், மெல்கம் கார்த்தினால் ரஞ்சித் ஆண்டகை குறித்த அறிக்கையின் பிரதி ஒன்றைத் தனக்கு தருமாறு கேட்டுக்கொண்டபோதிலும் அதுவும் வழங்கப்படவில்லை.
250 உயிர்களைக் காவுகொண்ட இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பொலிஸ்மா அதிபரிடமும், சட்டமா அதிபரிடமும், நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும், ஆண்டகையிடமும் மற்றும் மக்களிடமும் வழங்க அரசாங்கம் இவ்வாறு தாமதிப்பது ஏன்? எதனால்?
பங்குச் சந்தையை மீண்டும் பாரிய டீல்காரர்கள் கைபற்றியுள்ளனர்
மீண்டும் பங்குச் சந்தையை பாரிய டீல்காரர்கள் கைபற்றியிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க 2021.02.12 கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.
முன்னாள் வங்கித் தலைவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான அஜிட் நிவாட் கப்ராலின் வழமையான சூதாட்டம் பங்குச் சந்தையில் நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
“இற்றைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் முதலாம் இடத்தில் இருந்த பங்குச் சந்தையை நடத்த முடியாமல் மூடும் நிலை ஏற்பட்டது எவ்வாறு? ஆயின் உண்மையான நிலை இன்றா, அல்லது நேற்றா?இங்கு நடைபெறுவது என்னவென்றால், அரசாங்கம் தலையிட்டு செயற்கை தன்மையொன்றை உருவாக்குகின்றது. தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பது தாங்க முடியாத அந்த செயற்கை தன்மை வெடித்துச் சிதறுவது.
அதனால் நாங்கள் அரசாங்கத்திடம் கூறுவது என்னவென்றால் புள்ளி விவரங்களை மூடி மறைத்தல், புள்ளி விவரங்களில் செய்யும் சித்து விளையாட்டுக்கள் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. பங்குச் சந்தையில் இருந்து கிடைக்கும் செய்தி யதார்த்த நிலைக்கு வாருங்கள் என்பதாகும்.
இதனால் நஷ்டம் ஏற்பட்டது பாரிய டீல்காரர்களுக்கு அல்ல. ஊழியர் சேமலாப நிதியை எடுத்து, அல்லது காணியொன்றை விற்று பணத்தைப் பெற்று வங்கியில் வட்டி குறைவு என்பதால் பங்குச் சந்தையில் முதலீடு செய்த சிறியவர்களுக்கு இந்த ஊதலில் சிக்கிக்கொண்டதால் சிறிய அளவில் பங்குச் சந்தையுடன் தொடர்புபட்டவர்களின் பணம் இழந்துபோயுள்ளது.
எனவே, அரசாங்கம் செயற்கையாக உருவாக்கும் குமிழிகளின் இரையாக வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றும் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று… மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்தைக் கடந்தது.
நாட்டில் மேலும் 940 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் 632 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
அத்துடன் 04 பேர் சிறைச்சாலை கொத்தணியில் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 04 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 56 ஆக உயர்ந்துள்ளது.
சங்கத்தலைவன் பெப்ரவரி 26 ரிலீஸ்…
பாரதிநாதன் அவர்களின் எழுத்தில் வெளியான தறியுடன் என்னும் நாவல் சங்கத்தலைவன் திரைப்படமாக எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம் திகதி வெளிவருகிறது.
மணிமாறன் இயக்கத்தில் வெளிவரும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ரம்யா, சுனு லக்ஸ்மி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
https://www.facebook.com/lankatruthtamil/posts/107910307994142
வவுனியா நகரசபைத் தொழிலார்கள் போராட்டத்தில்…
வவுனியா நகரசபையானது தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதியான நடவடிக்கைகளைக் கண்டித்தும் நீதிகோரியும் இன்று (12) புதிய அரச பொது ஊழியர் சங்கத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இப்போராட்டத்தில், ” நகரசபைத் தலைவரே! தொழிலாளர்களை சாதி சொல்லித் திட்டுவது சரியா?”, “தொழிலாளர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்”, ” நகரசபை நிர்வாகமே ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் ஆக்கு”, “மாதாந்தம் ஒவ்வொரு ஊழியரும் 3000/=, 4000/=, 5000/= என இழந்து வருகிறார்கள். இது சரியா?”, “நகரசபை நிர்வாகமே !பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி வழங்கு” என்ற பல கோஷங்களை முன்னிறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் செய்கின்றனர்.




ராஜபக்ஷகளுக்கு உச்சா போகும்போது முஸ்லிம்கள் தான் கட்டிக் கல்…
“மறு பேச்சுக்கு இடமில்லை, கொவிட் மரணங்களுக்கு தகனம் மட்டும் தான்” என ராஜபக்ஷகள் வாய்ச் சொல் வீசி எச்சில் காயும் முன்னர் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அடக்கத்துக்கு அனுமதி வழங்குவதாக பாராளுமன்றத்தில் கூறிவிட்டார்.
கொவிட் மரணங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்காத உலகின் ஒரேயொரு நாடு இலங்கை. ராஜபக்ஷகளின் முன்மாதிரி நாடான சீனாவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி உண்டா இல்லையா என அறியக் கிடைப்பதில்லை.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை, உலக சுகாதார அமைப்பு (WHO), இலங்கையின் நிபுணத்துவக் குழுவின் இரண்டு அறிக்கைகள் என அனைத்தும் கொவிட் மரணங்களை அடக்கம் செய்வதனால் தீங்குகள்; ஆபத்துக்கள் இல்லை எனக் கூறியிருந்தபோதிலும் ராஜபக்ஷகள் தமது மடமைக் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
மேலும் ராஜபக்ஷகளின் போராளிக் குழுக்களான தீவிரவாத பிக்குகள் கொவிட்டினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்தால் அரசாங்கத்தையும் சேர்ந்து புதைத்துவிடுவதாக மஞ்சள் அங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு அச்சுருத்தினர்.
ராஜபக்ஷகளின் இழி ஊடகங்களும் ஒத்து ஊதி இக் கருத்தை சமூகமயப்படுத்துவதில் நேரத்தை செலவிட்டன.
தற்போது, திடீரென ராஜபக்ஷகள் அடக்கத்துக்கு அனுமதி அளிப்பதாகக் கூறுகின்றனர்.ஏன் ? பல காரணங்கள் உள்ளன.
அதிலொன்று: P2P பொத்துவில் முதல் பொலிகண்டி வரை தமிழ் முஸ்லிம் பேரணியாகும். மரணிக்கும் தமது மக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்காத ராஜபக்ஷகளின் தான்தோன்றித்தனத்தினால் முஸ்லிம் சமூகம் ஓன்று திரண்டு பேரணியில் கலந்துகொண்டது. இதற்கு எதிராக எந்தவொரு முஸ்லிம் அரசில்வாதியோ மத குருவோ மறுப்பு கூறவில்லை. ராஜபகஷைகள் இதற்கு பயந்தனர் …!
இரண்டாவது:எதிர்வரும் 22 ஆம் திகதி ஜினீவாவில் ஆரம்பிக்கும் ஐ.நா.வின் மனித உரிமை பேரவையின் 46 ஆம் அமர்வுக்கு இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் சமர்ப்பித்துள்ள நீளமான அறிக்கையில் பலவந்த பிரேத (ஜனாஸா) தகனத்தை கண்டித்துள்ளார்.
இவ் அமர்வுக்கு சமர்ப்பிக்கப்படும் இலங்கை தொடர்பான முன்மொழிவில் பலவந்த தகனத்தை கண்டிக்கும் பந்தியொன்று இணைக்கப்படவுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பமொன்றில் வாக்குரிமை பெற்ற முஸ்லிம் நாடுகள் குறைந்த பட்சம் வாக்களிக்காமல் தவிர்ந்துகொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ராஜபக்ஷகள் இதற்கும் பயந்தனர் …!
மூன்றாவது:இலங்கையில் பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் உறவினர்கள் ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்து இடைக்கால சலுகையொன்றைப் பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர்.
இக் கோரிக்கையை பிரித்தானியாவின் முஸ்லிம் கவுன்சிலும் விருதுபெற்ற பிரித்தானிய சட்ட நிறுவனமான பிண்டாமாக்ஸும் இணைந்து முன்வைத்துள்ளன.ராஜபக்ஷகள் இதற்கும் பயந்தனர் …!
இறுதியாக:பெப்ரவரி 22 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பலவந்த தகனத்தை நிறுத்தவில்லை என்றால் தான் இலங்கைக்கு விஜயம் செய்வதில் கஷ்டமான நிலையொன்றுக்கு முகங்கொடுக்க நேரிடும் என இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார். இஸ்லாமிய நாடுகளின் பேரவையில் (OIC) பிரதான இடம் வகிக்கும் நாடு, பாகிஸ்தான். இஸ்லாமிய நாடுகளின் பேரவை பலவந்த தகனத்தை கண்டித்து இதுவரை இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.ராஜபக்ஷகள் இதற்கும் பயந்தனர் …!
கொவிட் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியது இதனால்தான். முஸ்லிம் விரோத பிக்குகள் திக்கு முக்காடி நிற்கின்றனர்.
வாய் வீச்சுக்கு பதிலாக அரசியல் உச்சா போக ஆரம்பித்துள்ளது.ராஜபக்ஷகளுக்கு உச்சா போகும்போதெல்லாம் கட்டிக் கல்லாக பிடிப்பது முஸ்லிம்களைத் தான்.
மூலக்கட்டுரை (சிங்களம்): Sri Lanka Brief வலைத்தளம் (2021.02.10) தமிழாக்கம்: Hisham Hussain Puttalam