பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்த போதிலும், உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்குமான எரிபொருள் கொடுப்பனவு தற்போதைய விலைக்கு ஏற்ப திருத்தப்பட்டமைக்கு அமைவாகவே, பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களின் தூரத்திற்கு ஏற்பவே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு அதிகளவிலான எரிபொருள் கொடுப்பனவு அதிகரிப்பு கிடைத்துள்ள அதேவேளை, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அத்தகைய பெரிய அளவிலான அதிகரிப்பு ஏற்படவில்லை.
பாராளுமன்றத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர வெளியிட்ட அறிக்கையிலேயே இத்தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர:
“பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் எந்தவிதத்திலும் அதிகரிக்கப்படவில்லை. எனினும், எரிபொருள் கொடுப்பனவுக்கு உரித்துள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு கிடைக்கும் தொகையானது தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப திருத்தப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்து வருவதை அடுத்து அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்தது.
எனவே, எரிபொருள் கொடுப்பனவு பெற தகுதியுடைய அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் கொடுப்பனவில் ஒரு குறிப்பிட்ட அதிகரிப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறிப்பிட்டளவு தொகை அதிகரித்துள்ளதே தவிர சம்பள உயர்வு எதுவும் வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.