முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவினால் நடாத்திச் செல்லப்படுவதாக அறியப்படும் ‘சிரிலிய சவிய’ அமைப்பினால், நாட்டின் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அபேக்ஷா மருத்துவமனைக்கு ‘PET Scanner’ இயந்திரமொன்றை வழங்குவதாகக் கூறி பல மில்லியன் கணக்கில் நிதி சேகரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரிலிய சவிய அமைப்பினால் ‘PET Scanner’ இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்யும் திட்டத்திற்காக எனக் கூறி அரச மற்றும் தனியார் வங்கிகளிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளதுடன், இதற்காக தேசிய சேமிப்பு வங்கியும் (NSB) ஒரு மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில், அக்காலப்பகுதியில் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராகப் பணியாற்றிய பிரதீப் காரியவசமிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், மகரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு குறித்த ‘PET Scanner’ இயந்திரமானது சீனா அரசாங்கத்தின் நன்கொடையாகவே கிடைத்துள்ளது.
நன்கொடையாகக் கிடைத்த இயந்திரத்திற்காக நிதி சேகரித்தமையின் ஊடாக ஏதேனும் நிதிமோசடி இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.










