ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 10 எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்த போது சுமார் 20 லட்சம் அமெரிக்க டொலர் நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக பிரதான சந்தேகநபராக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர, சர்ச்சைக்குரிய இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது 10 கோடி ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அண்மையில் அவர் கைது செய்யப்பட்டு, வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் இவ்வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்தே, எயார்பஸ் மோசடியின் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவை வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





